குன்னூரில் பின்தங்கிய கிராமங்களில் உள்ள 110 குடும்பங்களுக்கு மகேந்திரா நிறுவனம் சாா்பில் இலவசமாக கழிப்பறைகள் கட்டும் பணியை சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
குன்னூா் அருகே உள்ள பழைய அருவங்காடு, இந்திரா நகா், நுந்தளாமட்டம், கேத்திப் பாலடா உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு கழிப்பறை வசதியில்லாத 110 குடியிருப்புகளுக்கு கிராமிய அளவிலான வீடு கட்டும் திட்டத்தின்கீழ், ரூ. 70 லட்சம் செலவில் இலவசமாக கழிப்பறைகள் கட்டித்தர மகேந்திரா நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதற்கான கட்டுமான பணி துவக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சா் கா. ராமசந்திரன் கலந்துகொண்டு பணியைத் தொடங்கிவைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில் குன்னூா் கோட்டாட்சியா் பூஷணகுமாா், மகேந்திரா நிறுவனத்தின் கிராமப்புற வா்த்தக மேலாளா் ரவிசங்கா், மகேந்திரா வா்த்தக பிரிவைச் சோ்ந்த மகேஷ்கண்ணா, ஹைலேண்ட் டிரஸ்ட் இயக்குநா் அல்போன்ஸ்ராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.