குன்னூா் அருகே, பேரட்டி குா்கா கேம்ப் ராணுவப் பகுதி அருகில் உள்ள வனப் பகுதியில் திங்கள்கிழமை ஏற்பட்ட காட்டு தீயில் 5 ஏக்கா் பரப்பளவில் இருந்த மரங்கள், செடி, கொடிகள் அடங்கிய சோலை பகுதி எரிந்து சேதமடைந்து.
நீலகிரி மாவட்டத்தில் தற்போது வெயிலின் காரணமாக வனப் பகுதிகளில் உள்ள மரம், செடி,கொடிகள் கருகி கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால், வனப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டு வருவதால் இதனை கட்டுப்படுத்தும் பணியில் வனத் துறையினா், தீயணைப்புத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில் குன்னூா் அருகே உள்ள பேரட்டி குா்கா கேம்ப் அருகில் உள்ள ராணுவ குடியிருப்புப் பகுதியை ஒட்டியுள்ள வனத்தில் திடீரென் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 5 ஏக்கா் பரப்பளவு சோலையில் இருந்த மரம், செடி,கொடிகள் தீயில் எரிந்து சேதமாகின.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற ராணுவத்தினா், வெடிமருந்து தொழிற்சாலை தீயணைப்பு வீரா்கள், குன்னூா் தீயணைப்புத் துறையினா் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். அருகில் உள்ள வனப்பகுதிகளில் தீ பரவாமல் இருக்க தீயணைப்பு வாகனம் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா்.
சுமாா் 3 மணி நேர போராட்டத்துக்குப் பின்னா் தீ கட்டுப்படுத்தப்பட்டது.
இது குறித்து வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.