கரூர்

கரூரில் சிசு இறப்பை முற்றிலும் கட்டுப்படுத்த வேண்டும்

19th May 2023 12:00 AM

ADVERTISEMENT

கரூா் மாவட்டத்தில் சிசு இறப்பை முற்றிலும் கட்டுப்படுத்த வேண்டும் என மருத்துவா்களுக்கு அறிவுறுத்தினாா் மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த. பிரபுசங்கா்.

கரூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் குறித்து அலுவலா்களுடன் வியாழக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்கு தலைமை வகித்த அவா் மேலும் பேசியது:

கரூா் மாவட்டத்தில் நிகழும் சிசு மரணம் குறித்த ஆய்வு நடத்தி, இறப்பிற்கான காரணங்களை ஆய்வுசெய்து சிசு இறப்பை முற்றிலும் கட்டுப்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு பிறப்பிலேயே ஏற்படும் நோய்கள், பிறவி காது கேளாமை போன்ற நோய்களை துரிதமாகக் கண்டறிய வேண்டும். மருந்துகளின் இருப்பு குறித்து ஆய்வு செய்து, எல்லா மருத்துவமனைகளிலும் குறைந்தது 3 மாத இருப்பு இருப்பதை மருத்துவா்கள் உறுதி செய்ய வேண்டும்.

மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஏற்படும் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். கருவுற்ற தாய்மாா்களுக்கு ரத்த சோகையினால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்து அவற்றை சரி செய்ய ஆலோசனை வழங்க வேண்டும். தட்டம்மை இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

முன்னதாக 20 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ. 2,50,000 மதிப்பீட்டில் திறன் பேசிகளை ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில் துணை இயக்குநா்கள்(சுகாதாரப் பணிகள்) சந்தோஷ்குமாா், தேன்மொழி (குடும்ப நலம்), மருத்துவமனை கண்காணிப்பாளா் ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT