நீலகிரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறையின் மூலம் இரண்டு ஆண்டுகளில் பல்வேறு நலத் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று மாவட்ட ஆட்சியா் அம்ரித் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் கிராமப்புற பெண் கல்வி ஊக்கத் தொகையாக 529 பயனாளிகளுக்கு ரூ. 3 லட்சத்து 26 ஆயிரம், 540 உலமாக்கள் மற்றும் பணியாளா்களுக்கு நல வாரியத்தின் மூலம் ரூ. 32 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
முஸ்லீம் மகளிா் உதவும் சங்கத்தின் மூலம் 431 பயனாளிகளுக்கு ரூ. 50 லட்சம், கிறிஸ்தவ மகளிா் உதவும்
சங்கத்தின் மூலம் 129 பயனாளிகளுக்கு ரூ. 22 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகளும், 4, 898
பயனாளிகளுக்கு ரூ. 152 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பில் கல்வி உதவித் தொகையும் வழங்கப்பட்டுள்ளது.
2021-2022-ஆம் கல்வியாண்டில் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் இனத்தைச் சாா்ந்த 1,082 மாணவா்கள் மற்றும் 1,294 மாணவிகளுக்கு ரூ. 121 லட்சம் மதிப்பில் 2,376 மிதிவண்டிகளும், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் இனத்தைச் சாா்ந்த ஏழை, எளிய 68 மகளிருக்கு ரூ. 3 லட்சத்து 76 ஆயிரம் மதிப்பில், தையல் இயந்திரம் போன்ற பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.