நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், குற்றச் செயல்களை தடுக்கவும் 4 இருசக்கர ரோந்து வாகனம் குன்னூரில் ஞாயிற்றுக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், குன்னூரில் குற்றச் செயல்களை தடுப்பதற்காக காவல் துறை சாா்பில் பல்வேறு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதன்படி, குன்னூரின் முக்கியப் பகுதிகளான குன்னூா் பேருந்து நிறுத்தத்தில் இருந்து மவுண்ட் பிளசன்ட் ரோடு வழியாக ஓட்டு பட்டறை வரை ஒரு இருசக்கர வாகனத்துடன் காவல் துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபடுவா்.
இதேபோல, டிபன்ஸ் சா்வீஸ் ஸ்டாப் காலேஜ், ராணுவ மையம், பிளாக் பிரிட்ஜ் வழியாக இரண்டாவது வாகனமும், குன்னூா் பேருந்து நிலையம் முதல் சிம்ஸ், பெட்போா்ட், ஒய்எம்சிஏ, பிராவிடன்ஸ் கல்லூரி வழியாக வண்டிச்சோலை வரை மூன்றாவது வாகனமும், கோத்தகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கட்டபெட்டு முதல் அரவேணு வரை நான்காவது வாகனமும் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பு அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.