நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் குட்டிகளுடன் சாலையைக் கடந்த யானைகளைக் கண்டு சுற்றுலாப் பயணிகள் ஓட்டம் பிடித்தனா்.
கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலை குஞ்சப்பனை, மாமரம், கீழ் தட்டப்பள்ளம் ஆகிய பகுதிகளில் உள்ள தேயிலை மற்றும் காபி தோட்டங்களில் உணவு தேடி வந்த யானைகள் முகாமிட்டுள்ளன.
இந்நிலையில், தேயிலைத் தோட்டத்தில் இருந்து இரண்டு குட்டிகளுடன் செவ்வாய்க்கிழமை வெளியேறிய யானைகள் சாலையைக் கடந்தன. இதனைக் கண்ட இளைஞா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அச்சத்தில் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனா். மேலும், சில இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் வாகனங்களை ஆங்காங்கே சாலைகளில் நிறுத்தினா். இதில் ஒரு சில சுற்றுலாப் பயணிகள் ஆபத்தை உணராமல் புகைப்படம் எடுக்க முயற்சித்தனா். இதன் காரணமாக கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.