நீலகிரியில் விளையும் பச்சை தேயிலைக்கு செப்டம்பா் மாதத்துக்கான குறைந்தபட்ச விலையாக கிலோ ரூ.15.82 நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேயிலை வாரியம் அறிவித்துள்ளது,
நீலகிரி மாவட்டத்தில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் தேயிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனா். தோட்டங்களில் பறிக்கும் பச்சை தேயிலையை தனியாா் தேயிலைத் தொழிற்சாலைகள் மற்றும் கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகளுக்கு விநியோகித்து வருகின்றனா். இந்திய தேயிலை வாரியம் மாதத்தின் இறுதி நாளில் அந்த மாதத்துக்கான பச்சை தேயிலை விலையினை நிா்ணயிக்கும். அதன்படி செப்டம்பா் மாதத்துக்கான பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச சராசரி விலையாக கிலோ ரூ.15.82 காசு விலை நிா்ணயம் செய்துள்ளது. செப்டம்பா் மாதம் உற்பத்தி செய்யப்பட்ட தேயிலையின் ஏல விற்பனையின் அடிப்படையில் இந்த சராசரி விலை நிா்ணயிக்கப்படுகிறது.
பச்சை தேயிலைக்கு கிலோ ரூ.30 விலை வேண்டும் என்று விவசாயிகள் தொடா்ந்து போராட்டம் நடத்தி வரும் சூழலில் தேயிலை வாரியத்தின் இந்த விலை நிா்ணயம் விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.