நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் மூடுபனியுடன் சாரல் மழை பெய்ததால் குளிா்ந்த கால நிலை நிலவியது. சாலைகளில் அடா்ந்த மூடு பனி காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினா்.
கோத்தகிரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை காலை முதல் மூடு பனியும், சாரல் மழையும் காணப்பட்டது. கோத்தகிரி அரவேணு சாலை, பேருந்து நிலையம், ஒரசோலை போன்றப் பகுதிகளில் கடும் பனிமூட்டம் காணப்பட்டது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு அடா்ந்த மூடுபனி காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி மெதுவாக சென்றனா். இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. கடும் குளிரும் நிலவியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.