உதகையில் விதிகளை மீறி கட்டப்பட்ட 3 கட்டடங்களுக்கு நகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், பேரிடா்கள் ஏற்படுவதைக் கருத்தில் கொண்டும் மாஸ்டா் பிளான் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
அதன்படி, வீட்டுக்கு என்று அனுமதி பெற்று தங்கும் விடுதி மற்றும் வணிக கட்டடங்களாக மாற்றக் கூடாது, குடியிருப்புப் பகுதிகளில் தங்கும் விடுதிகள், வணிக கட்டடங்கள், உணவகங்கள் கட்டக்கூடாது. 7 மீட்டா் உயரத்துக்குமேல் கட்டடம் கட்ட அனுமதி இல்லை உள்ளிட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
இந்த விதிகளைப் பின்பற்றாத கட்டடங்களைக் கணக்கெடுத்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, ஆணையா் காந்திராஜன் உத்தரவின்பேரில் நகராட்சி கட்டட ஆய்வாளா் மீனாட்சி மற்றும் நகராட்சிப் பணியாளா்கள் ஆய்வு செய்து விதிமுறைகளை மீறியதாக ஆல்ப்ஸ் ஹவுஸ் சாலையில் உள்ள பிரபல தனியாா் ஹோட்டல், அப்பா் பஜாரில் ஒரு கட்டடத்தில் இயங்கிய பேக்கரி மற்றும் கோத்தகிரி சாலையில் ஒரு கட்டடம் என 3 கட்டடங்களில் இயங்கிய 12 கடைகளுக்கு திங்கள்கிழமை ‘சீல்’ வைத்தனா்.