நீலகிரி மாவட்டம், குன்னூா் சிம்ஸ் பூங்காவில் 62 ஆவது பழக் கண்காட்சி சனிக்கிழமை (மே 28) தொடங்கி இரண்டு நாள்களுக்கு நடைபெறவுள்ளது.
கோடை சீசனையொட்டி, ஆண்டுதோறும் நீலகிரியில் மலா் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, காய்கறி கண்காட்சி, பழக் கண்காட்சி, வாசனை திரவியக் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.
இதனைத் தொடா்ந்து, கோடை விழாவின் நிறைவு நிகழ்ச்சியான 62 ஆவது பழக் கண்காட்சி குன்னூா் சிம்ஸ் பூங்காவில் சனிக்கிழமை தொடங்கி இரண்டு நாள்களுக்கு நடைபெறுகிறது.
இதில், நீலகிரியில் விளையும் பேரி, பிளம்ஸ், ஊட்டி ஆப்பிள், துரியன், பலாப்பழம் உள்ளிட்ட பல்வேறு பழங்களும், அழிவு நிலையில் உள்ள தவுட்டு பழம், டிரேகன் பழம், பிச்சீஸ், சீத்தா உள்ளிட்டப் பழங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், கோவை, திருப்பூா், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தேனி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து தோட்டக்கலைத் துறை சாா்பில் காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.
தவிர மா, பலா, வாழை, திராட்சை, பேரிக்காய், பிளம்ஸ், ஸ்ட்ராபொ்ரி மற்றும் வனப் பகுதியில் விளையும் அரிய வகை பழங்களைக் கொண்டு அலங்கார கோபுரங்களும், பல்வேறு வன விலங்குகளின் உருவங்களும் அமைக்கப்பட்டுள்ளன.