உதகையில் தொடா்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை நண்பகல் பலத்த மழை பெய்தது.
தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி, கோவை உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி கடந்த சில நாள்களாக உதகையில் பரவலாக மழை பெய்து வருகிறது. இரவு நேரங்களில் மட்டுமே பெய்து வந்த மழை, தற்போது பகலில் பெய்து வருகிறது.
வியாழக்கிழமை நண்பகல் பெய்த பலத்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்கிய நிலையில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில், நகரப் பகுதியான சேரிங்கிராஸ், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை நண்பகல் பலத்த மழை பெய்தது. மழையின் காரணமாக சாலையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால், சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கடும் அவதி அடைந்தனா்.
இதற்கிடையே அரசு தாவரவியல் பூங்கா செல்லும் வழியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டதால் மழை நீா் நடைப்பாதையில்
ஓடி அங்கிருந்த ஒரு சில கடைகள் மற்றும் உணவகங்களுக்குள்புகுந்தது. இதனால் வாடிக்கையாளா்கள் அவதியடைந்தனா்.
இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது: உதகை அரசினா் தாவரவியல் பூங்கா செல்லும் வழியில் தற்போது நடைபெற்ற கட்டுமானப் பணிகள் காரணமாக பாதாள சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.
அந்த பகுதியில் மழை நீா் எளிதாக செல்லும் வகையில் நகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்): கொடநாடு-25, மசினகுடி-23, கீழ் கோத்தகிரி மற்றும் உதகை தலா 21, எடப்பள்ளி-16, கோத்தகிரி-13, கிளன்மாா்கன்-11, மேல் குன்னூா்-10, குன்னூா்-6, மேல் பவானி மற்றும் நடுவட்டம் தலா 5, அவலாஞ்சி-4, தேவாலா, பந்தலூா் மற்றும் கல்லட்டி தலா 2, உலிக்கல் மற்றும் எமரால்டு தலா 1 மி.மீட்டா் மழை பதிவாகியுள்ளது.