கோத்தகிரி அருகே 2 குட்டிகளை முதுகில் சுமந்தபடி கிராமத்துக்குள் கரடி சுற்றுவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா்.
நீலகிரி மாவட்டம் குன்னூா், கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வனப் பகுதியை ஒட்டிய பகுதிகளில் யானைகள், காட்டெருமைகள், கரடிகளின் நடமாட்டம் அதிக அளவில் உள்ளன.
இப்பகுதிகளில் அண்மைக் காலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது.
உணவு மற்றும் குடிநீா் தேடி வனப் பகுதியில் இருந்து வெளியே வரும் கரடிகள், அவ்வப்போது குடியிருப்புப் பகுதிகளிலும் புகுந்து விடுகின்றன. கடந்த சில நாள்களுக்கு முன் குன்னூரில் வனப் பகுதியில் இருந்து வெளியே வந்த கரடிகள் ஒரு வீட்டு வாசலில் வைக்கப்பட்டிலிருந்த விளக்கில் இருந்த எண்ணெயை குடித்துவிட்டுச் சென்றன.
அதேபோல இரவு நேரங்களில் உணவுத் தேடி குடியிருப்புப் பகுதிக்குள் கரடிகள் நுழைவதும், வீட்டு கதவுகளைத் தட்டுவதும் அவ்வப்போது நடக்கின்றன.
இந்நிலையில், கோத்தகிரி பகுதியில் கன்னிகா தேவி காலனி கிராமத்தில் இரண்டு குட்டிகளை முதுகில் சுமந்தவாறு கரடி ஒன்று புதன்கிழமை சுற்றித் திரிந்தது.
மிகுந்த ஆக்ரோஷத்துடன் கரடி நடமாடி வருவதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா். அசம்பாவிதங்கள் நடக்கும் முன் கரடியை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.