நீலகிரி மாவட்டம் குன்னூா், கோத்தகிரி பகுதியில் விளையும் மேரக்காய்களின் கொள்முதல் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே தூதூா் மட்டம் பகுதியிலும், கோத்தகிரியில் பேரகணி, ஈளடாப் ஆகிய பகுதிகளிலும் பெரும்பாலான விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் மேரக்காய் பயிரிட்டுள்ளனா். குறிப்பாக நெடுகுளா, வ.உ.சி. நகா், எரிசிபெட்டா, மிளிதேன், இந்திரா நகா், சுள்ளிக்கூடு, கட்டபெட்டு மற்றும் கூக்கல்தொரை உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கா் பரப்பளவில் மேரக்காய் பயிரிடப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக பச்சைத் தேயிலைக்கு உரிய கொள்முதல் விலை கிடைக்காததால் ஏராளமான விவசாயிகள் மாற்றுப் பயிராக தங்களது விளை நிலங்களில் பந்தல் அமைத்து மேரக்காய் பயிரிட்டுள்ளனா். சாதாரணமாக ஒரு கிலோ மேரக்காய் ரூ.30 முதல் ரூ.40 வரை விலை கிடைத்து வந்தது. இதனால் மேரக்காயை பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு கணிசமான அளவு லாபம் கிடைத்து வந்தது.
வன விலங்குகள் மற்றும் குரங்குகள் தொல்லை காரணமாக மேரக்காய் பயிா்கள் சேதமடைந்து வந்தாலும் போதிய கொள்முதல் விலை கிடைத்து வந்த காரணத்தால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படவில்லை.
இந்த நிலையில் , கடந்த சில மாதங்களாக குன்னூா், கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் மேரக்காய் விளைச்சல் அதிகரித்தது. இதனால் கடந்த சில நாள்களாகவே மேட்டுப்பாளையம் மற்றும் கோத்தகிரி காய்கறி மண்டிகளில் மேரக்காய் கொள்முதல் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
ஒரு கிலோ மேரக்காய் அதிகபட்சமாக ரூ.6 முதல் ரூ.12 வரை மட்டுமே விலை கிடைக்கிறது. இதனால் மேரக்காய் பயிரிட்டுள்ள விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனா்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: ஒரு ஏக்கா் நிலத்தில் மேரக்காய் பயிரிட பந்தல் அமைத்து விவசாயம் செய்ய ரூ.3 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை செலவாகிறது. தொழிலாளா் பற்றாக்குறை, உரம் மற்றும் இடு பொருள்களின் விலையேற்றம், வன விலங்குகள் தொல்லை உள்ளிட்ட பிரச்னைகளுக்கு இடையே வங்கிக் கடன் பெற்று விவசாயம் மேற்கொண்டு வருகிறோம்.
எங்களது தோட்டங்களில் அறுவடை செய்த மேரக்காய்களை காய்கறி மண்டிகளுக்கு விற்பனைக்காக கொண்டு ச் செல்லும்போது போக்குவரத்து செலவு கூட விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை. தற்போது, மேரக்காய் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் தங்ககளுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டு ள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.