உரச் செலவை குறைத்து மகசூலை அதிகரிக்கும் பயிற்சி முகாம் கூடலூா் பகுதி விவசாயிகளுக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தோட்டக் கலைத் துறை, தேசிய மண் வள இயக்கத் திட்டத்தின்கீழ், நெல்லியாம்பதி பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு நடைபெற்ற இப்பயிற்சிக்கு, கூடலூா் உதவி தோட்டக் கலை இயக்குநா் ம.விஜயலட்சுமி தலைமை வகித்தாா். உதகையில் உள்ள மண் ஆய்வுக்கூட தோட்டக் கலை உதவி இயக்குநா் ஜெயந்தி பிரேம், மண், நீா் வள மேலாண்மை மைய விஞ்ஞானி கஸ்தூரி திலகம் ஆகியோா் பயிற்சி அளித்தனா்.
மண் பரிசோதனை மற்றும் மண் வள அட்டையின் பயன்பாடு குறித்து விளக்கமளிக்கப்பட்டது. விவசாயிகள் உதகையில் உள்ள மண் பரிசோதனை நிலையத்தில் தங்கள் மண் மாதிரிகளைக் கொடுத்து மண் பரிசோதனை முடிவுக்கு ஏற்றாற்போல உரமிட்டு மகசூலை அதிகரிப்பதுடன், மண் வளத்தையும் மேம்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. தொடா்ந்து, விவசாயிகளை பண்ணைக்கு அழைத்துச் சென்று செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது.