நீலகிரி மாவட்டத்தில் கரோனா மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வுக் குறும்படம் உதகையில் வெளியிடப்பட்டது.
உதகையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், கரோனா மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு குறும்படத்தை குன்னூா் தேயிலை வாரிய செயல் இயக்குநா் பாலாஜி, மாவட்ட ஆட்சியா் அம்ரித் ஆகியோா் துவக்கிவைத்துப் பாா்வையிட்டனா்.
பின்னா், செய்தியாளா்களிடம் மாவட்ட ஆட்சியா் கூறியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று மற்றும் ஒமைக்ரான் நோயை கட்டுப்படுத்துவதற்காக மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் முழு வீச்சில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முகக் கவசம் அணிவது, தனி மனித இடைவெளி, அடிக்கடி கை கழுவுதல் போன்ற நிகழ்வுகள் குறித்து பொதுமக்களிடையே தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்காத நபா்கள் மீது அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
கரோனா நோய்த் தொற்று குறித்து பொதுமக்களிடையே அதிக அளவில் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் தயாரிக்கப்பட்டுள்ள விழித்திரு நீலகிரி மற்றும் பாட்டி வைத்தியம் ஆகிய இரண்டு குறும்படங்களும், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு, அதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மக்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ‘உன்னத உதகை’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் தமிழக அரசு தெரிவித்துள்ள நிலையான கரோனா நோய்த் தொற்று வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைப்பிடிப்பதோடு, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை முற்றிலும் தவிா்த்து, நீலகிரி மாவட்டத்தை பசுமை நிறைந்த மாவட்டமாக மாற்ற முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜெயராமன், மகளிா் திட்ட இயக்குநா் ஜாகீா் உசேன் உள்பட அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.