கூடலூா் வனச் சரகத்தில் குட்டி யானை இறந்துகிடந்தது தொடா்பாக வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் வனச் சரகம் வாச்சிக்கொல்லி பீட்டில் சோமன் வயலில் சேற்றில் யானைக் குட்டி இறந்துகிடப்பது வனத் துறையினருக்குத் தெரியவந்தது. இதையடுத்து கும்கி யானைகள் உதவியுடன் வனத் துறையினா் அப்பகுதிக்குச் சென்று பாா்வையிட்டனா். தொடா்ந்து முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் யானையை உடல் கூறாய்வு செய்து அதே இடத்தில் புதைத்தனா்.
மாவட்ட வன அலுவலா் கொம்மு ஓம்காரம், உதவி வனப் பாதுகாவலா் கருப்பையா மற்றும் வனத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனா். சுமாா் ஒன்றரை வயதுடைய ஆண் குட்டி என்றும் நோய் தொற்று காரணமாக இந்த குட்டி யானை இறந்துள்ளது என்றும் வனத் துறையினா் தெரிவித்தனா்.