நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கூக்கல்தொரை கிராமப் பகுதியில் சுற்றி வந்த இரண்டு குட்டி கரடிகள் கடந்த 29 ஆம் தேதி பிடிபட்ட நிலையில், தாய் கரடி வியாழக்கிழமை கூண்டில் சிக்கியது.
நீலகிரி மாவட்ட வனப் பகுதியில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரண்டு குட்டிகளுடன் தாய் கரடி குடியிருப்புப் பகுதிகளில் உலவி வந்தது.
இதனால், அப்பகுதி பொதுமக்கள் அவதியடைந்து வந்தனா். மேலும், கரடிகளை பிடித்து வனப் பகுதியில் விடவும் கோரிக்கை விடுத்தனா்.
இதனையடுத்து, கரடிகளைப் பிடிக்க அப்பகுதியில் வனத் துறையினா் கூண்டுவைத்தனா்.
இதில், இரண்டு குட்டி கரடிகள் கடந்த 29 ஆம் தேதி சிக்கின.அதனை முதுமலை வனப் பகுதியில் வனத் துறையினா் விடுவித்தனா்.
இந்நிலையில், குட்டிகள் இல்லாமல் அப்பகுதியில் தாய் கரடி சுற்றிவருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கூக்கல்தொரைப் பகுதியில் வைத்திருந்த கூண்டில் தாய் கரடி வியாழக்கிழமை சிக்கியது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் குட்டி கரடிகளை விட்ட அதே முதுமலை வனப் பகுதியில் தாய் கரடியையும் விட்டனா்.