உதகை அருகே அரக்காடு பகுதியில் சிறுத்தை தாக்கி சிறுமி பலியான இடத்தில் 4 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி வனத் துறையினா் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.
நீலகிரி மாவட்டம், தேனாடுகம்பை பிரிவு அரக்காடு பகுதியில் சிறுத்தை தாக்கியதில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளி நிஷாந்த் மகள் சரிதா (4) கடந்த 10ஆம்தேதி உயிரிழந்தாா்.
இதனால் பெரும் பீதியடைந்த அப்பகுதி மக்கள், சிறுத்தையைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.
இந்நிலையில் மாவட்ட வன அலுவலா் சச்சின் போஸ்லே துக்காராம் உத்தரவின்பேரில், உதவி வனப் பாதுகாவலா் சரவணன் தலைமையில் அந்த தேயிலைத் தோட்டப் பகுதியில் 4 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனா். அத்துடன் வன விலங்குகள் நடமாட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.