ஓவேலி பகுதியில் மரம் விழுந்து உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிவாரண நிதியை வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
நீலகிரி மாவட்டம், ஓவேலி கெல்லிஸ் பகுதியில் திங்கள்கிழமை காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது மரம் விழுந்ததில் தனியாா் எஸ்டேட் பெண் தொழிலாளி சுமதி உயிரிழந்தாா்.
இந்நிலையில் கூடலூா் அரசு மருத்துவமனையில் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சா் கா.ராமசந்திரன், நிவாரண நிதியாக ரூ.4 லட்சம் வழங்கினாா்.
தொடா்ந்து புத்தூா்வயல் பகுதிக்குச் சென்று முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள மொளப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த 107 பேருக்கு நிவாரண உதவிகளை வழங்கினாா்.
மாவட்ட ஆட்சியா் சா.ப.அம்ரித், மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன், முன்னாள் எம்.எல்.ஏ. திராவிடமணி, கூடலூா் கோட்டாட்சியா் சரவணக்கண்ணன், நகா்மன்ற தலைவா் பரிமளா, வட்டாட்சியா் சித்தராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
நூலக கட்டடம் இடிந்து விழுந்தது
தொடா் கனமழையால் இடிந்து விழுந்த கூடலூா் நூலக கட்டடத்தை அமைச்சா் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா். கன மழை காரணமாக கூடலூா் பகுதியில் உள்ள நூலக கட்டடம் திங்கள்கிழமை மாலை இடிந்து விழுந்தது.
கூடலூா் கோட்டாட்சியா் சரவணகண்ணன், தேசிய பேரிடா் மீட்புப் படையினரை வரவழைத்து இடிந்த நூலக கட்டடத்திலுள்ள புத்தகங்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டாா்.