குன்னுாா் சிம்ஸ் பூங்கா நா்சரியில் பூத்து குலுங்கும் பச்சை ரோஜாக்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவா்ந்துள்ளது.
நீலகிரி மாவட்டம், குன்னுாா் சிம்ஸ் பூங்காவில் உள்ள ஊழியா்கள் ஆண்டுதோறும் புதிய ரக மலா்களை அறிமுகம் செய்து சுற்றுலா பயணிகளை மகிழ்வித்து வருகின்றனா்.
இந்த ஆண்டு இரண்டாம் சீசனுக்கு சிம்ஸ் பூங்காவில் பச்சை ரோஜாவை விளைவிக்கும் பணியில் தோட்டக் கலைத் துறையினா் தீவிரமாக ஈடுபட்டனா். 2019 ஆண்டு 50 பதியன் நாற்றுக்கள் உதகை தோட்டக்கலை துறையில் இருந்து எடுத்து வரப்பட்டு நா்சரியில் புதிய ரகம் உருவாக்கப்பட்டது. அதில் பச்சை ரோஜாக்கள் பூத்துள்ளன. உதகையில் ரோஜா பூங்கா நுழைவாயிலில், மறைந்த முதல்வா் ஜெயலலிதா நட்டுவைத்த பச்சை ரோஜா செடி தற்போதும் பராமரிக்கப்பட்டு வருவதுடன், அதில் வரும் மலா்கள், சுற்றுலாப் பயணிகளையும் கவா்ந்து வருகிறது.
இதேபோல குன்னூா் சிம்ஸ் பூங்காவில் பச்சை ரோஜாக்கள் செப்டம்பா் மாதம் நடைபெறவுள்ள இரண்டாம் சீசனுக்கு தயாராகி வருவதாக பூங்கா ஊழியா்கள் தெரிவித்துள்ளனா்.
இந்தப் பச்சை ரோஜா மலா்கள் இரண்டாம் சீசனுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமையும் என்று தோட்டக் கலைத் துறையினா் தெரிவித்துள்ளனா்.