நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அகநாடு எஸ்டேட் பகுதியில் தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்த கரடியை வனத் துறையினா் உயிருடன் மீட்டனா்.
கோத்தகிரியில் உள்ள அரவேணு, மிளிதேன் உள்ளிட்டப் பகுதிகளில் உள்ள 10க்கும் மேற்பட்ட கரடிகள் தண்ணீா் மற்றும் உணவு தேடி அவ்வப்போது குடியிருப்புப் பகுதிகளுக்கு வருவது வழக்கம். இதன் காரணமாக இப்பகுதியில் தேயிலைத் தோட்டத்துக்கு இலை பறிக்க செல்லும் தொழிலாளா்கள் மிகுந்த அச்சத்துடன் வேலைக்குச் சென்று திரும்புகின்றனா்.
இந்நிலையில், கோத்தகிரி அகநாடு தேயிலை எஸ்டேட் பகுதியில் உள்ள தண்ணீா் தொட்டியில் கரடி ஒன்று விழுந்து உயிருக்குப் போராடி வருவதாக அப்பகுதி மக்கள் வனத் துறைக்குத் தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் கிராம மக்கள் உதவியுடன் தண்ணீா் தொட்டியில் தத்தளித்த கரடியை மேலே ஏறி வருவதற்கு வசதியாக ஏணி அமைத்தனா்.
பின்னா் கரடியின் பின் புறத்தில் நெருப்பு பந்தங்களை காட்டி அச்சுறுத்தினா். இதனைத் தொடா்ந்து ஏணியின் அருகில் வந்த கரடி அங்கிருந்த ஏணியில் ஏறி கிணற்றில் இருந்து வெளியில் வந்து அருகில் உள்ள சோலைப் பகுதிக்குச் சென்றது.