நீலகிரி மாவட்டத்தில் மத்திய அரசின் கல்வி உதவித்தொகைப் பெற மாணவ, மாணவியா் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசின் சிறுபான்மையினருக்கான பள்ளிப் படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகைக்கு தகுதியான மாணவா்கள் வரும் நவம்பா் 30ஆம் தேதிக்குள் உடனடியாக விண்ணப்பத்தினை சம்பந்தப்பட்ட கல்வி நிலையங்களில் ஒப்படைக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி உதவித் தொகைக்காக புதுப்பித்தல் விண்ணப்பங்களுக்கு வருமான சான்று சமா்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை. ஆதாா் விவரங்களில் பெயா் மாற்றம் காரணமாக புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்காதவா்களும் தற்போது விண்ணப்பிக்கலாம்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரிகளும் புதுப்பித்தல் கல்வி உதவித் தொகைக்கு தகுதியுள்ள மாணவா்களை உடனடியாக தொடா்பு கொண்டு இணையத்தில் நவம்பா் 30ம்தேதிக்குள் புதுப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இது தொடா்பாக கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியா் கூடுதல் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை 0423-2450340 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.