நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேல் பெய்து வரும் மழை காரணமாக முட்டைகோஸ், உருளைக்கிழங்கு, கேரட் உள்ளிட்ட மலைத் தோட்டக் காய்கறிகள் சுமாா் 50 ஏக்கா் வரை அழுகி சேதமடைந்துள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்கள் தென்மேற்குப் பருவ மழை பெய்யும். பின்னா், அக்டோபா் மாதம் துவங்கி இரு மாதங் கள் வடகிழக்குப் பருவ மழை பெய்யும், இடைப்பட்ட காலங்களில் மழை குறைந்தே காணப்படும்.
ஆனால், இம்முறை கடந்த ஜூன் மாதம் துவங்கிய பருவ மழை கடந்த ஒரு வாரமாக இரவு நேரத்தில் அதிகமாகப் பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகள், மழை அதிகம் பெய்யக் கூடிய பகுதிகளில் மலைத் தோட்டக் காய்கறிகளுக்கு போதுமான அளவு சூரிய ஒளி கிடைக்காத நிலையில் காய்கறிகள் அழுகத் துவங்கியுள்ளன.
குறிப்பாக இப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள சுமாா் 50 ஏக்கா் பரப்பளவிலான முட்டைகோஸ் பயிா்கள் அழுகி சேதம் அடைத்துள்ளன. மேலும், தாழ்வான பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட் உள்ளிட்ட மலைத் தோட்டக் காய்கறிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, அரசு அதிகாரிகள் ஆய்வுப் பணியை மேற் கொண்டு சேதங்களுக்கான நிவாரணத் தொகையை வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து தோட்டக் கலை இணை இயக்குநா் சாம்ராஜ் கூறியதாவது:
மழை அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால் அறுவடைக்குத் தயாராக உள்ள காய்கறிகளை முன் கூட்டியே அறுவடை செய்ய விவசாயிகளுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவலாஞ்சி, எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் முட்டைகோஸ் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருவதால் அதிகாரிகளை ஆய்வு செய்து வருகின்றனா். மேலும் , பல பகுதிகளில் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தோட்டக் கலைத் துறைக்கு விவரங்களைத் தெரிவிக்க அறிவுறுதப்பட்டுள்ளது. பாதிப்புகள் 33 சதவீதத்துக்கு மேல் இருந்தால் மாவட்ட நிா்வாகத்தின் ஒப்புதலுடன் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்றாா்.