மசினங்குடியில் உயிரிழந்த காட்டு யானை மீது எரியும் டயரை வீசிய விடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகம் அருகில் உள்ள மசினகுடி பகுதியில் காயத்துடன் சுற்றி வந்த ஆண் யானை சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தது.
கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு நடைபெற்ற இச்சம்பவத்தில் யானை உடல் பிரேத பரிசோதனை நடத்தப்பட்ட போதுதான் அதன் காதின் பின்புறம் இருந்த காயம் கண்டுபிடிக்கப்பட்டது.
பிற யானைகளோடு ஏற்பட்ட சண்டையோ அல்லது பெரிய மரக்கிளை குத்தியதாலோ ஏற்பட்ட காயம் என வனத்துறையினர் நினைத்திருந்த சூழலில் யானை மீது டயரை கொளுத்தி வீசும் காட்சிகள் வெளியாகி உள்ளன. யானை கொளுத்தப்பட்ட இடம் ரிசார்ட் அல்ல குடியிருப்பு பகுதி எனக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக ரேமண்ட், பிரசாந்த் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் சிலரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.