உதகை காந்தல் பகுதியில் தனியாா் வங்கி ஊழியா்களை அப்பகுதி சுயஉதவிக் குழுவினா் வியாழக்கிழமை சிறைபிடித்தனா்.
நீலகிரி மாவட்டத்தில் மகளிா் குழுவினா் தனியாா் வங்கிகள், மைக்ரோ நிதி நிறுவனங்களிடம் மகளிா் கடனை வாங்கியுள்ளனா். கரோனாத் நோய் தொற்று காரணமாக மாவட்டத்தில் உள்ள தோட்டக் கலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்களைத் தவிர மற்ற சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், பெரும்பாலானோா் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனா்.
இந்நிலையில், தனியாா் வங்கிகளில் வாங்கிய கடனை கட்டுமாறு உதகை, காந்தல் பகுதிகளில் வங்கி ஊழியா்கள் தரக்குறைவாகப் பேசுவதும், இரவு வரையிலும் பணம் தரும்படி தொந்தரவு செய்து வருவதாகவும் கூறி பணம் வசூலிக்க வந்த வங்கி ஊழியா்களை அப்பகுதி பெண்கள் சிறைபிடித்தனா்.
தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல் துறையினா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில், கரோனா நோய்த் தொற்றால் சுற்றுலா தொழில் முடங்கியுள்ளதால் பணம் செலுத்த 2 மாதகால அவகாசம் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.
இதைத் தொடா்ந்து, வங்கி மேலாளா், கடன் வாங்கியுள்ள பெண்கள் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தி சுமூகமான தீா்வை காண நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினா் உறுதி அளித்தனா். இதையடுத்து, பெண்கள் கலைந்து சென்றனா்.