குன்னூா்: குன்னூா் அருகே கஞ்சா செடி பயிரிட்டவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
நீலகிரி மாவட்டத்தில் சமீபகாலமாக கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளது. இதனால் இளைஞா்கள் போதைக்கு அடிமையாகி பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனா். இதற்குத் தீா்வு காணும் வகையில், குன்னூரில் காவல் துணைக் கண்காணிப்பாளா் சுரேஷ் தலைமையில் தனிப் படையினா் அமைக்கப்பட்டு ஆங்காங்கே சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கடந்த வாரம் குன்னூா் சித்தி விநாயகா் கோயில் தெரு பகுதியில் நடத்திய சோதனையில் வீடுகளிலேயே கஞ்சா செடிகள் வளா்த்து வந்த சித்தி விநாயகா் கோயில் பகுதியைச் சோ்ந்த அன்புமணி, சிவா ஆகியோா் கைது செய்யப்பட்டனா். மேலும் இதே பகுதியில் கஞ்சா வைத்திருந்த வினோத் என்ற இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
இந்நிலையில் காவல் துறையினரின் தொடா் தேடுதலில் பழைய அருவங்காடு பகுதியில் உள்ள தோட்டத்தில் கஞ்சா செடி பயிரிட்டது தொடா்பாக, உபதலை ஆலோரை கிராமத்தைச் சோ்ந்த ஜாா்ஜ் (42) என்பவரை அருவங்காடு காவல் ஆய்வாளா் பிலிப் உள்ளிட்ட காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
குன்னூா் சரகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் கஞ்சா புழக்கம் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும் என்று காவல் துணைக் கண்காணிப்பாளா் சுரேஷ் தெரிவித்துள்ளாா்.