கூடலூா்: கூடலூரை அடுத்து மசினகுடி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட தமிழக - கா்நாடக வன எல்லையில் உள்ள தெப்பக்காடு ஆனைப்பாடி பழங்குடி கிராமத்தில் குறை தீா்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு உதகை கோட்டாட்சியா் சுரேஷ் தலைமை வகித்தாா். தனி வட்டாட்சியா் கோபாலகிருஷ்ணன், வட்டாட்சியா் சிவகுமாா், வனச் சரக அலுவலா் ராஜேந்திரன், மசினகுடி காவல் உதவி ஆய்வாளா் நிக்கோலஸ், தனிப் பிரிவு உதவி ஆய்வாளா் விஜயன் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்கள் இதில் கலந்துகொண்டனா்.
இங்கு பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 70 மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டன. இதில் 9 பேருக்கு ஜாதிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 50 பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. ஊட்டச் சத்து குறைபாடு உள்ள 4 குழந்தைகளுக்கு ரூ. 2000 வழங்கப்பட்டது.