கூடலூரை அடுத்துள்ள மரப்பாலம் பகுதியில் பொதுமக்கள் அமைத்த சாலையை புதன்கிழமை இரவு வனத் துறையினர் சேதப்படுத்தினர்.
கூடலூர் வனக் கோட்டத்தில் உள்ள மரப்பாலம் சீனக்கொல்லி கிராமப் பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. இதில் பாதி தூரத்துக்கு மட்டும் சாலை அமைத்துவிட்டு மீதமுள்ள தூரத்தை மண் சாலையாகவே விட்டுவிட்டனர்.
சாலைப் பணியை முழுமையாக முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மீதமுள்ள பகுதியில் சாலை அமைக்க முடிவு செய்த கிராம மக்கள் தங்களுக்குள் பணம் வசூலித்து கடந்த இரண்டு நாள்களுக்கு முன் கான்கிரீட் சாலை அமைத்தனர்.
ஆனால் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி அருகே இருப்பதாகக் கூறி அந்தச் சாலையை வனத் துறையினர் முற்றிலும் சேதப்படுத்தி மீண்டும் மண் சாலையாக மாற்றியுள்ளனர்.
இந்நிலையில் தங்கள் கிராமத்துக்கு நிரந்தர சாலை அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.