கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம்:  தோட்டத் தொழிலாளர்கள் அச்சம்

குன்னூர் உலிக்கல் அருகே வெள்ளாலமட்டம் கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் காரணமாக  அப்பகுதி மக்கள்

குன்னூர் உலிக்கல் அருகே வெள்ளாலமட்டம் கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் காரணமாக  அப்பகுதி மக்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து வனத் துறைக்கு இப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர். 
குன்னூர் உலிக்கல் பேரூராட்சிக்கு உள்பட்ட வெள்ளாலமட்டம் பகுதியில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இங்கு அருகில் உள்ள வனப் பகுதியில் இருந்து கடந்த ஒரு வாரமாக சிறுத்தை நடமாடி வருவதை தோட்டத் தொழிலாளர்கள் பார்த்துள்ளனர். 
தேயிலைத் தோட்டம் அருகேயுள்ள பாறையின் மீது பகலில் அமர்ந்திருக்கும் சிறுத்தை இரவு நேரத்தில் கிராமத்துக்குள் நடமாடுவதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் தொழிலாளர்கள் தினமும் அச்சத்துடன் தேயிலை பறிக்கச் சென்று வருகின்றனர். எனவே, இந்தப் பகுதிகளில் வனத் துறையினர் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு சிறுத்தையை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வனத் துறைக்கு புகார் அளித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com