உதகையில் இம்மாதம் 17ஆம் தேதி தொடங்கவுள்ள மலர்க்கட்சியையொட்டி காட்சி மாடங்களில் மலர்த்தொட்டிகளை அடுக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.
உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் இம்மாதம் 17ஆம் தேதி தொடங்கி 21ஆம்தேதி வரை 123ஆவது மலர்க் காட்சி நடைபெற உள்ளது. இதில் சுமார் 35 ஆயிரம் மலர்த் தொட்டிகள் வைக்கப்பட உள்ளன.
இந்த மலர்த் தொட்டிகளை காட்சி மாடங்களில் அடுக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.
இதை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா, தோட்டக் கலைத் துறை இணை இயக்குநர் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ் ஆகியோர் தொடக்கி வைத்தனர்.
இந்த மலர்த் தொட்டிகளில் இன்கா மெரிகோல்டு, பிரெஞ்சு மெரிகோல்டு, பிளாக்ஸ், பெட்டூனியா, சால்வியா, பிகோனியா, செம்பர் புளோரன்ஸ், ஆஸ்டர், பால்சம், ஓரியண்ட் லில்லி, கிரசாந்திமம், வின்கா, கேம்பலூனா, காம்பிரினா, கைலார்டியர், கிளாடியோலஸ், கேல், சினரேரியா, கிளாக்சீனியா ஆகியவற்றுடன் நடப்பாண்டில் சிறப்பம்சமாக குட்டை ரக ஜெர்பரா, கேலஞ்சியோ, டெல்பீனியம், ஆன்டிரைனம், கேனா, நிமோசியா, ஜிப்சோபில்லா, ஜினியா, செலோசியா மற்றும் அரிய வகை ரெனன்குலஸ், டியூப்ரஸ் பிகோனியா, பாயின்சிட்டியா போன்ற 200 வகை மலர்ச் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன.