கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் சாலையோரம் வந்த மயிலுடன் செல்ஃபி எடுத்து கேரள சுற்றுலாப் பயணி விளையாடியுள்ளார்.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள தெப்பக்காடு பகுதியில் கேரள சுற்றுலா பயணி ஒருவர், சாலையோரம் தனது காரை நிறுத்திவிட்டு காத்திருந்தார். அப்போது, சாலையோரமாக வந்த மயிலுடன் செல்ஃபி எடுத்து விளையாடியுள்ளார். நீண்ட நேரமாக சுற்றுலாப் பயணி அதே இடத்தில் இருந்துள்ளார். இருப்பினும், வனத் துறையினரோ நெடுஞ்சாலை ரோந்துப் படையினரோ அந்தப் பகுதிக்கு வரவில்லை.
காட்டுத் தீயால் எரிந்து வனங்கள் வறண்டு கிடக்கும் நிலையில், உணவு, குடிநீர் தேடி விலங்குகள் சாலையோரங்களுக்கு வரும் நிலையில், இதுபோல புகைப்படம் எடுத்து விளையாடுபவர்களின் உயிருக்கே வன விலங்குகளால் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
வனத் துறையினர் இத்தகைய நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என வன ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.