கூடலூர் பகுதியில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் மழை நீர் ஒழுகுவதால் பயணிகள் நனைந்து அவதிக்குள்ளாகின்றனர்.
கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகளின் மேற்கூரைகள் ஓட்டை இருப்பதால் அவற்றின் வழியே மழை நீர் ஒழுகுகிறது. தற்சமயம் இப்பகுதியில் பலத்த மழை பெய்வதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
பந்தலூரிருந்து கூடலூர் நோக்கி வெள்ளிக்கிழமை வந்த அரசுப் பேருந்தில் இவ்வாறு மழை நீர் ஒழுகியதால் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பயணிகள் இருக்கைகளில் அமரமுடியாமல் நின்றவாறே பயணித்தனர். எனவே, இப்பகுதியில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.