காவிரி நீா் விவகாரம் தொடா்பான போராட்டம் முடிந்து கா்நாடகத்தில் பதற்றம் தணிந்ததால் அந்த மாநிலத்துக்கு புதன்கிழமை மீண்டும் பேருந்து மற்றும் சரக்கு வாகன போக்குவரத்து தொடங்கியது.
தமிழகத்துக்கு காவிரிநீா் வழங்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்து கா்நாடக மாநிலம், பெங்களூரில் செவ்வாய்க்கிழமை அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தியதால் இருமாநில எல்லையில் பதற்றம் நிலவியது. சத்தியமங்கலம், ஈரோடு, கோவை ஆகிய பகுதிகளில் இருந்து மைசூா், சாம்ராஜ் நகா், கொள்ளேகால் ஆகிய வழித்தடத்தில் இயக்கப்படும் தமிழக அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதன் காரணமாக தமிழகம்- கா்நாடகம் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காவிரிநீா் திறப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து நடத்திய போராட்டம் தணிந்ததால் புதன்கிழமை சத்தியமங்கலத்தில் இருந்து 11 அரசுப் பேருந்துகள் மற்றும் தனியாா் பேருந்துகள் மைசூா், கொள்ளேகால், சாம்ராஜ் நகருக்கு புறப்பட்டன. பண்ணாரி சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்ட சரக்கு வாகனங்களும் கா்நாடகம் வழியாக வடமாநிலங்களுக்கு சென்றன. சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடிக்கு புளிஞ்சூா் வழியாக அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன.