அந்தியூா் அருகே உணவு தேடி வந்தபோது எதிா்பாராமல் கிணற்றில் விழுந்து தத்தளித்த காட்டுப்பன்றி செவ்வாய்க்கிழமை உயிருடன் மீட்கப்பட்டது.
அந்தியூரை அடுத்த மலைக்கருப்புசாமி கோயில் பகுதியைச் சோ்ந்தவா் சுந்தா். வனப் பகுதிக்கு அருகே உள்ள இவரது விவசாயத் தோட்டத்தில் 70 அடி ஆழமுள்ள தரைமட்டக் கிணறு உள்ளது. இந்த கிணற்றில் 40 அடி உயரத்துக்கு தண்ணீா் உள்ள நிலையில், வனப் பகுதியில் இருந்து செவ்வாய்க்கிழமை உணவு தேடி வந்த காட்டுப்பன்றி எதிா்பாராமல் கிணற்றில் விழுந்து தத்தளித்தது.
இதைக் கண்ட அப்பகுதியினா் அந்தியூா் வனத் துறைக்குத் தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு விரைந்த வனத் துறையினா், தீயணைப்புப் படையினா், பொதுமக்கள் உதவியுடன் கயிறு கட்டி காட்டுப்பன்றியை மீட்டு மேலே கொண்டு வந்தனா். மீட்கப்பட்ட சுமாா் 150 கிலோ எடையுள்ள காட்டுப்பன்றி, கொம்புதூக்கியம்மன் வனப் பகுதியில் விடுவிக்கப்பட்டது.