மகனிடம் இருந்து ரூ.90 லட்சத்தை மீட்டுத் தர வேண்டும் என முதியவா் கோரிக்கை விடுத்துள்ளாா்.
ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள கணக்கம்பாளையத்தைச் சோ்ந்தவா் நாச்சிமுத்து (84). இவா் ஈரோடு மாவட்டக் காவல் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த மனு விவரம்:
கணக்கம்பாளையத்தில் எனக்கு சொந்தமான நிலம் உள்ளது. விவசாயம் செய்ய முடியவில்லை என்பதால் எனது நிலத்தை கடந்த ஓராண்டுக்கு முன்பு விற்பனை செய்தேன். நிலம் விற்ற பணத்தில் எனது மகன் சுப்பிரமணி மற்றும் மகள்களுக்கு முடிந்த தொகையை கொடுத்துவிட்டு மீதமுள்ள ரூ.20 லட்சத்தை வங்கி, அஞ்சல் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்திருந்தேன். எனது மகனும், மருமகளும் பணம் வேண்டும் என்று கேட்டதால் ரூ.20 லட்சத்தை எடுத்துக் கொடுத்துவிட்டேன். ஏற்கெனவே நிலம் வாங்கித் தருவதாக ரூ.70 லட்சத்தைப் பெற்றுக் கொண்டனா்.
ஆனால் நிலமும் வாங்கிக் கொடுக்கவில்லை. பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. தற்போது எனது மகனும், மருமகளும் என்னை கவனித்து கொள்வதில்லை. பணம் கேட்டால் கொலை செய்துவிடுவதாக மிரட்டுகின்றனா். எனவே மகன், மருமகள் மீது நடவடிக்கை எடுத்து ரூ.90 லட்சத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.