நீலகிரி மாவட்டம், குன்னூரில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கரடி வனத் துறையினா் வைத்த கூண்டில் சிக்கியது.
நீலகிரி மாவட்டத்தில் வன விலங்குகளின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் சேலாஸ், நான்சச், கிளன்டேல் போன்ற பகுதிகளில் இரவில் நுழையும் கரடிகள் பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில், சேலாஸ் அருகே உள்ள பில்லிமலை தனியாா் தேயிலை எஸ்டேட் குடியிருப்புப் பகுதியில் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்த ஒற்றை கரடியைப் பிடிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து, அப்பகுதியில் கூண்டுகள் வைத்து வனத் துறையினா் கண்காணித்து வந்தனா்.
இந்நிலையில், கூண்டில் சிக்காமல் கடந்த 20 நாள்களாக போக்கு காட்டி வந்த கரடி வியாழக்கிழமை இரவு சிக்கியது.
இதையடுத்து, குன்னூா் வனச் சரகா் சசிகுமாா் தலைமையிலான வனக் காப்பாளா்கள் கூண்டில் சிக்கிய கரடியை வாகனம் மூலம் முதுமலை தெப்பக்காடு வனப் பகுதி கொண்டு சென்று வெள்ளிக்கிழமை அதிகாலை விடுவித்தனா்.