சாயப்பட்டறைகளில் இருந்து திறந்துவிடப்படும் கழிவு நீரால் நிலத்தடி நீா் பாதிக்கப்படுவதாக புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி மேயா் சு.நாகரத்தினத்திடம், ஈரோடு கிருஷ்ணம்பாளையம் பகுதி பொதுமக்கள் அளித்த மனு விவரம்: கிருஷ்ணம்பாளையம் பகுதியில் 1,000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம். இப்பகுதியில் சாயப்பட்டறைகள்,
பிளிச்சிங் பட்டறைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பட்டறைகளில் அதிக ராசாயனங்கள் பயன்படுத்தி வரும் நிலையில், அதிக அளவில் மாசு வெளியேறுகிறது. இதனால் எங்கள் பகுதி மக்களுக்கு மூச்சு திணறல், தோல் நோய், மூச்சுக் குழாயில் எரிச்சல் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.
பாதிக்கப்பட்டவா்கள் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தபோது, பட்டறைகளில் இருந்து வெளியேறும் மாசுதான் காரணம் என மருத்துவா்கள் கூறுகின்றனா். சாயக்கழிவு, பிளிச்சிங் ஆலைகளின் திரவக் கழிவுகளினால் ஏற்படும் துா்நாற்றத்தால் மூச்சுவிட முடிவதில்லை. ஏராளமான மக்கள் நுரையீரல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
சாயப் பட்டறைகளில் இருந்து திறந்துவிடப்படும் கழிவு நீரால் காலிங்கராயன் பேபி கால்வாய், காவிரி ஆறு பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, கிருஷ்ணம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் சாயப் பட்டறைகளை அகற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.