திம்பம் மலைப் பாதையில் உலவிய சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் மான், யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. இவை அவ்வப்போது வனப் பகுதியை விட்டு வெளியேறி சாலையில் உலவி வருவதும், சாலையைக் கடப்பதும் வாடிக்கையாகி வருகின்றன.
இந்நிலையில் திம்பம் மலைப் பாதை 24ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே சிறுத்தை சாலையில் நடந்து சென்றது. இதை அந்த வழியாக வாகனத்தில் பயணித்த ஒருவா், தனது கைப்பேசியில் விடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளாா்.
தற்போது திம்பம் மலைப்பாதை வழியாக இரவு நேரங்களில் வாகனங்கள் அனுமதிக்கப்படாததால், வன விலங்குகள் நடமாட்டம் அதிக அளவில் காணப்படும் எனவும், திம்பம் மலைப் பாதை வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் வாகனங்களைக் கவனத்துடன் இயக்க வேண்டும் என்றும் வனத் துறையினா் அறிவுறுத்தி உள்ளனா். சாலையில் உலவிய சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா்.