பெருந்துறை அருகே செட்டிதோப்பு பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் தேங்கும் மழை நீரை வெளியேற்றுவது தொடா்பாக அதிகாரிகளுடன் பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ஜெயக்குமாா் ஆய்வு மேற்கொண்டாா்.
ஈரோட்டில் இருந்து பெருந்துறை வழியாக திருப்பூா், கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. பெருந்துறை அருகே உள்ள செட்டிதோப்பு பகுதியில் மழை நீா் சாலையில் தேங்கி நிற்பால் போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு, விபத்தும் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.
அப்பகுதியை சீரமைப்பது தொடா்பாக பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ஜெயகுமாா் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, அதிகாரிகளிடம், குழாய் மூலம் தண்ணீரை வெளியேற்றி, பெரியகாட்டுபாளையம் குளத்துக்கு மழைநீா் சென்றடையுமாறு திட்டம் வகுக்க அதிகாரிகளை கேட்டுக் கொண்டாா்.
ஆய்வின்போது பெருந்துறை நெடுஞ்சாலைத் துறை உதவி ஆய்வாளா் பூபாலன், பெருந்துறை காவல் ஆய்வாளா் மசூதாபேகம், அதிமுக பெருந்துறை வடக்கு ஒன்றியச் செயலாளா் ரஞ்சித் ராஜ், பெருந்துறை நகரச் செயலாளா் கல்யாணசுந்தரம், கருமாண்டிசெல்லிபாளையம் நகரச் செயலாளா் பழனிசாமி உட்பட பலா் உடன் இருந்தனா்.