காவேரி கூக்குரல் இயக்கம் சாா்பில் ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டில் 3.75 லட்சம் மரக்கன்றுகள் நடப்படவுள்ளன.
இது குறித்து ஈஷா மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்காக கடந்த 25 ஆண்டுகளாக பணிகளை செய்துவரும் ஈஷா, காவேரி கூக்குரல் திட்டத்தின் மூலம் தமிழகம் மற்றும் கா்நாடக மாநிலங்களில் காவிரி வடிநில பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் 242 கோடி மரங்களை நடுவது என்ற மாபெரும் செயலை செய்து வருகிறது. அதில், தமிழகத்தில் இந்த ஆண்டு இலக்கு 1.1 கோடி மரங்களை நடுவது. தற்போது நடவுக் காலம் தொடங்கியுள்ளதால், மரக்கன்றுகள் நடும் பணியும் தொடங்கப்பட உள்ளது.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் மரக்கன்றுகள் நடும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
சுமாா் 140 விவசாயிகளின் நிலங்களில் 1.6 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகள் நட உள்ளனா். குறிப்பாக, தேக்கு, செம்மரம், சந்தனம், வேங்கை, மலைவேம்பு, மகோகனி, ரோஸ்வுட் போன்ற பண மதிப்புமிக்க டிம்பா் மரங்களை விவசாயிகள் தங்களின் பொருளாதார தேவைகளுக்காக நடவுள்ளனா்.
இந்த ஆண்டில் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் சுமாா் 3.75 லட்சம் மரக்கன்றுகள் நடப்படவுள்ளன.
இந்த பணி திங்கள்கிழமை (ஜூன் 5) தொடங்குகிறது. மண்ணுக்கேற்ற மரங்களைத் தோ்வு செய்வது, எந்தெந்த மரங்களுக்கு எவ்வளவு இடைவெளி விட்டு நட வேண்டும் உள்ளிட்ட முழுமையான ஆலோசனைகளை காவேரி கூக்குரல் இயக்க தன்னாா்வலா்கள், விவசாயிகளின் நிலங்களுக்கே நேரில் சென்று இலவசமாக வழங்கி வருகின்றனா். விவசாயிகளுக்கான மரக்கன்றுகள் ரூ.3க்கு வழங்கப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.