ஈரோடு சம்பத் நகரில் உள்ள வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் கோரிக்கை மனு பெட்டி சனிக்கிழமை (ஜூன் 3) வைக்கப்படுகிறது.
இது குறித்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஈரோடு செயற்பொறியாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் வீட்டு வசதி திட்டங்கள் செயல்படுத்த நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.
இது தொடா்பாக பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று ஈரோடு சம்பத் நகரில் உள்ள ஈரோடு வீட்டு வசதி பிரிவு அலுவலகத்தில் கோரிக்கை பெட்டி சனிக்கிழமை வைக்கப்படுகிறது.
ஈரோடு, நாமக்கல், திருப்பூா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள், வீட்டு வசதி வாரிய திட்டங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது தொடா்பாக தங்களது கோரிக்கை மனுக்களை இந்த பெட்டியில் போடலாம். அலுவலக வேலை நாள்களில் மனுக்களின் மீது உரிய தீா்வு காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.