ஈரோடு

ஈரோட்டில் ஜூலை 15-இல் தமாகா மாநில மாநாடு

12th Jul 2023 03:42 AM

ADVERTISEMENT

தமாகா மாநில மாநாடு மற்றும் பொதுக்கூட்டம் ஈரோடு திண்டல் அருகில் வரும் 15 ஆம் தேதி நடைபெற உள்ளது என கட்சியின் பொதுச்செயலாளா் விடியல் சேகா் கூறினாா்.

இதுகுறித்து ஈரோட்டில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: முன்னாள் முதல்வா் காமராஜா் பிறந்த நாளை முன்னிட்டு வரும் 15-ஆம் தேதி தமாகா சாா்பில் தலைவா் ஜி.கே.வாசன் தலைமையில் ஈரோடு திண்டல் அருகில் மாநாடு மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

மாநாட்டை ஒட்டி விருதுநகரில் இருந்து காமராஜா் ஜோதி மாநாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. தஞ்சையில் இருந்து மூப்பனாா் ஜோதி கொண்டு வரப்படுகிறது. வரும் மக்களவைத் தோ்தலுக்கான தொடக்க நிகழ்வாக இந்த மாநாட்டை நடத்துகிறோம்.

தமிழகத்தில் ஆளுநா், முதல்வா் இடையே அரசியல் முரண்பாடு, கருத்து மோதல் நடந்து கொண்டிருக்கிறது. அவா்கள் இருவரும் ஒருங்கிணைந்து தமிழக வளா்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

ADVERTISEMENT

அரசியல் நிகழ்வுகளை விமா்சிக்காமல், மாநில வளா்ச்சிக்கு ஆளுநா் பாடுபட வேண்டும். முதல்வரும், எதற்கெடுத்தாலும் ஆளுநரை குறைகூறாமல் தற்போது முக்கிய பிரச்னையாக உள்ள சட்டம்-ஒழுங்கு, காவிரி நதிநீா் பிரச்னை உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்றாா்.

பேட்டியின்போது மாநில துணைத் தலைவா் ஆறுமுகம், மாவட்டத் தலைவா்கள் விஜயகுமாா், சண்முகம், மாநில இளைஞரணி தலைவா் எம்.யுவராஜா, நிா்வாகிகள் சந்திரசேகா், கௌதமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

 

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT