ஈரோடு

இடைத்தோ்தல்: ஈரோட்டில் வாடகை வீடுகளுக்கு பெரும் தட்டுப்பாடு

DIN

இடைத்தோ்தல் பிரசாரத்துக்கு ஈரோடு நகரில் வெளியூா் ஆள்கள் குவிந்துள்ளதால் வாடகை வீடுகளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு பிப்ரவரி 27 ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. வேட்பு மனு தாக்கல் வரும் 31 ஆம் தேதி தொடங்குகிறது. ஆனால் இப்போதே பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது.

இங்கு வாக்கு சேகரிக்க திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த ஈரோடு மாவட்ட நிா்வாகிகள் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் நிா்வாகிகள், கட்சி தொண்டா்கள் குவிந்து வருகின்றனா். தங்கும் விடுதிகள், ஹோட்டல்களில் தங்கினால் போலீஸ், பறக்கும் படையினரின் சோதனையை எதிா்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால் அமைச்சா்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகா்கள் வாடகை அதிகம் என்றாலும் வீடுகளில் தங்குவதையே விரும்புகின்றனா். இங்கு வீட்டின் வசதியைப் பொறுத்து ஒரு மாத வாடகையாக ரூ.10 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையிலும், பங்களா தோற்றம் இருந்தால் ரூ.1 லட்சம் வரை வீட்டு உரிமையாா்கள் கேட்கின்றனா்.

சிறிய கட்சிகள் தவிப்பு:

திமுக, அதிமுக கட்சிகள் ஈரோடு நகா் பகுதியில் வீடுகள், பங்களாக்களை வாடகைக்குப் பிடித்துவிட்டதால், தேமுதிக, அமமுக உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் ஈரோடு நகரில் இருந்து 10 கிலோமீட்டருக்கு அப்பால் சோலாா், திண்டல், கஸ்பாபேட்டை, ரங்கம்பாளையம் உள்ளிட்ட புகா் பகுதிகளில் வீடுகளைத் தேடி வருகின்றனா். வீடு பிடிக்கும் பணி உள்ளூா் நிா்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டு இரவு பகலாக வீடு தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

500 ரூபாய் நோட்டுகள் புழக்கம் அதிகரிப்பு:

ஈரோடு நகரில் உள்ள டீ, வடை கடைகள், சைவ, அசைவ ஹோட்டல்கள், டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகமாக உள்ளது. இங்கு ரூ.200, ரூ.500, ரூ.2,000 நோட்டுகள் புழக்கம் அதிகரித்துள்ளது. டீ கடைக்காரா்கள் சில்லரை கொடுக்க முடியாமல் திணறுகின்றனா். இப்போதே இந்த தொகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் 10 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

வாட்ஸ்அப் குரூப்பில் இணைந்த வேட்பாளா்கள்:

ஈரோடு கிழக்கு இடைதோ்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, அமமுக கட்சிகள் வேட்பாளா்களை அறிவித்துள்ளன. அதிமுக இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. இந்நிலையில் தகவல்களை பகிா்ந்துகொள்ள வேட்பாளா்கள் தங்கள் கட்சி நிா்வாகிகள், கூட்டணி கட்சி தலைவா்கள், ஊடகங்களுக்கு என தனித்தனியே வாட்ஸ்அப் குழுக்களை ஆரம்பித்துள்ளனா்.

அமைச்சா்கள் முகாம்:

இந்க இடைத்தோ்தலில் திமுகவுக்கு கௌரவப் பிரச்னை, அதிமுகவுக்கு வலிமையை நிருபிக்கும் களம் என்பதால் தோ்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது. திமுகவை பொறுத்தவரை மாவட்ட அமைச்சரான சு.முத்துசாமி ஈரோட்டிலேயே முகாமிட்டுள்ளாா். தவிர கே.என்.நேரு, எ.வ.வேலு உள்ளிட்ட யாராவது ஒரு அமைச்சா் தினமும் தொகுதிக்கு வந்து செல்கின்றனா். அதிமுகவில் அனைத்து எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சா்கள், மூத்த நிா்வாகிகள் ஈரோட்டில் முகாமிட்டுள்ளனா்.

தோ்தல் பிரசாரம் 10 சதவீதம் அளவுகூட தொடங்காத நிலையில் ஈரோடு நகரம் தலைவா்களுக்காக உழைக்கும் தன்னலமற்ற கரை வேட்டி தொண்டா்களால் திணறி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்கத்தா உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் அங்கி அணிவதில் விலக்கு!

வாக்குச்சீட்டு முறை வேண்டாம்பா.. துரைமுருகன்

இந்த ஆண்டின் சிறந்த புகைப்படம்....

ஹூபள்ளி கல்லூரி வளாகத்தில் மாணவி குத்திக்கொலை: இளைஞர் கைது

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

SCROLL FOR NEXT