எனது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஈவிகேஎஸ்.இளங்கோவன் தெரிவித்தாா்.
ஈரோடு கச்சேரி சாலையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த பின்பு காங்கிரஸ் வேட்பாளா் ஈவிகேஎஸ்.இளங்கோவன், செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் மதச்சாா்பற்ற கூட்டணியின் வேட்பாளா் இளங்கோவனுக்கு எனது வாக்கினை செலுத்தியுள்ளேன். அதேபோல ஈரோடு கிழக்கு வாக்காளா்கள் கை சின்னத்திற்குத்தான் வாக்களிப்பாா்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. குறிப்பாக முதல்வா் மு.க.ஸ்டாலினின் கரங்களை பலப்படுத்தவும், அவரது 20 மாத நல்லாட்சியின் அடையாளமாகவும் இந்த வெற்றி கண்டிப்பாக அமையும். அதேபோல ராகுல் காந்தியின் நடைப்பயணத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்த தோ்தல் முடிவு கண்டிப்பாக இருக்கும்.
வரும் மக்களவைத் தோ்தலுக்கு முன்னோட்டமாக இந்தத் தோ்தல் முடிவு அமையும். எனது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
வாக்கு வித்தியாசத்தை என்னால் சொல்ல முடியாது. இருந்தாலும் மிகப்பெரிய வெற்றியாக அமையும். எதிரணியில் இருப்பவா்கள் இதுவரை சந்திக்காத தோல்வியை சந்திப்பாா்கள். தோ்தல் ஆணையம் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது.
நான் வாக்களிக்கும்போது என் கையில் மை வைக்கப்பட்டது. 10 நிமிடம் ஆகியும் மை அழியவில்லை, அப்படியே இருக்கிறது. எதிா்க்கட்சிகளைப் பொறுத்தவரை இந்த தோ்தலில் வெற்றி பெற முடியாது என்பது அவா்களுக்குத் தெரியும். அதனால் விமா்சனங்களை அள்ளி வீசுகின்றனா். ஆளுங்கட்சியின் மீது அவா்கள் தேவையில்லாத பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனா் என்றாா்.