ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடக்கும் இடையன்காட்டுவலசு பகுதியில் திமுகவினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டு வருவதாக அதிமுக தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் புகாரளிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா மறைவைத் தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் திங்கள்கிழமை நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ்.இளங்கோவன், அதிமுகவில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சியில் மேனகா நவநீதன், தேமுதிகவில் எஸ்.ஆனந்த் மற்ற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இதையும் படிக்க- சீர்காழி அருகே கிராம மக்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு
இதற்கிடையே இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்தில் சில வாக்குச்சாவடி மைங்களில் வைக்கப்படும் மை, எண்ணெய் வைத்தாலே அழிவதாக அதிமுக புகாரளித்தது. ஆனால் தேர்தல் அலுவலர் சார்பாக மை அழியவில்லை என்று விளக்கம் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள இரு வாக்குச்சாவடி அருகே திமுகவினர் பணப்பட்டுவாடா செய்வதாக அதிமுக தரப்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை தேர்தல் ஆணையத்துக்கு அளித்துள்ள புகாரில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் திமுக விதிமீறலில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக இடையன்காட்டுவலசு பகுதியில் உள்ள வாக்குச்சாவடி எண் 138, 139ல் திமுகவினர் கட்சிக் கொடியுடன் பணப்பட்டுவாடா செய்கின்றனர். அதேபோல் வெளி மாவட்ட திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பாகவும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.