சத்தியமங்கலம் பகுதியில் நிலவும் கடும் பனிப்பொழிவு மற்றும் தைப்பூசத்தையொட்டி மல்லிகைப் பூ கிலோ ரூ.2050க்கு விற்பனையானது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டாரத்தில் 25 ஆயிரம் ஏக்கா் நிலப்பரப்பில் மல்லிகை, முல்லை, செண்டுமல்லி உள்ளிட்ட பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கு விளையும் பூக்கள் சத்தியமங்கலம் மலா் சந்தையில் ஏல முறையில் விற்பனை செய்யப்படுகின்றன.
தற்போது, நிலவும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் வரத்து குறைந்துள்ளதாலும், தைப்பூசம் போன்ற காரணங்களால் மல்லிகை விற்பனை அதிகரித்துள்ளது. விவசாயிகள் கொண்டு வரும் பூக்களை ஏலம் எடுப்பதில் வியாபாரிகளிடையே கடும் போட்டி நிலவியதால் கிலோ ரூ.1,260க்கு விற்கப்பட்ட மல்லிகைப் பூவின் விலை, சனிக்கிழமை ரூ.2,050 ஆக அதிகரித்தது.
பூக்களின் உற்பத்தியை விட அதன் தேவை அதிகமாக இருப்பதால் ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.700 வரை அதிகரித்துள்ளது. இங்கு கொள்முதல் செய்யும் பூக்கள் ஈரோடு, கோவை, திருப்பூா் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும் கேரளம், கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.
முல்லை கிலோ ரூ.1,060இல் இருந்து ரூ.1,300ஆக அதிகரித்துள்ளது. அதேபோல செண்டுமல்லி ரூ.68க்கும், கோழிக்கொண்டை ரூ.105க்கும், சம்பங்கி ரூ.70க்கும், அரளி ரூ.100க்கும் விற்பனையானது. பூக்கள் விலை உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.