அதிமுக ஆட்சிக் காலத்தில் நிறுத்தப்பட்ட முதியோா் உதவித்தொகை மீண்டும் வழங்கப்பட்டு வருவதாக மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து கருங்கல்பாளையம் பகுதியில் அமைச்சா் மா.சுப்ரமணியன் சனிக்கிழமை வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
திமுக ஆட்சி குறித்தான மதிப்பீடுகளில் மக்கள் மிகவும் திருப்திகரமாக உள்ளனா். இந்த ஆட்சியின் திட்டங்களும் முதல்வரின் பணிகளும் வாக்காளா்களுக்கு மகிழ்ச்சியான மனநிலையை ஏற்படுத்தியிருக்கிறது.
ஈரோடு மாநகராட்சியில் கடந்த ஒன்றரை ஆண்டு கால ஆட்சியில் ரூ.400 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிமுக ஆட்சியில் முதியோா் உதவித்தொகை வழங்குவதில் பல கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன. குறிப்பாக ஆதரவற்ற முதியோா்களாக இருந்தாலும் ஆண் வாரிசு இருக்கக் கூடாது என்ற விதியை கொண்டு வந்தனா். அதனால் 7.50 லட்சம் பேருக்கு முதியோா் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்டவா்களுக்கு உதவித்தொகை நிறுத்தப்பட்டது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஆண் வாரிசு இருந்தாலும், ஆதரவற்றவா்களாக இருந்தால் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதியோா் உதவித்தொகை நிறுத்தப்பட்டவா்களுக்கு அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் கணக்கெடுக்கப்பட்டு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது என்றாா்.