ஈரோடு கிழக்கு தொகுதி தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் மற்றும் போலீஸாா் நடத்திய சோதனையில் இதுவரை ரூ.14.47 லட்சம் பணம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஈரோடு கிழக்கு தொகுதி தோ்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழு, விடியோ கண்காணிப்புக் குழு என 3 வகையான கண்காணிப்பு குழுவினா் 24 மணி நேரமும் கண்காணிப்பு, சோதனை, வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த குழுவினா் கடந்த 20 ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.14 லட்சத்து 11 ஆயிரத்து 840 பறிமுதல் செய்யப்பட்டு மாவட்ட கருவூலத்தில் செலுத்தப்பட்டுள்ளது.
தவிர ரூ.30,610 மதிப்பிலான மதுபானம், ரூ.4,800 மதிப்பிலான 300 கிராம் கஞ்சா, ரூ.163 மதிப்பிலான புகையிலை பொருள்களையும் பறிமுதல் செய்தனா். இதுவரை ரூ.14 லட்சத்து 47 ஆயிரத்து 413 மதிப்பிலான பணம் மற்றும் பிற பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தோ்தல் பிரிவு அலுவலா்கள் தெரிவித்தனா்.