அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பி.செந்தில் முருகன் வெள்ளிக்கிழமை வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
முன்னதாக ஈரோடு முனிசிபல் காலனி பகுதியில் ஓபிஎஸ் அணியின் தேர்தல் பணிமனை திறக்கப்பட்டது. தேசிய ஜனநாயக கூட்டணி பாசறை கூட்டம் என பெயரிடப்பட்டுள்ளது. இதில் ஒருபுறம் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் முழு உருவப் படங்களும், மறுபுறம் பிரதமர் மோடி, ஓபிஎஸ் படங்களுடன், வேட்பாளர் படமும் இடம் பெற்றுள்ளது.
மேலும் பெரியார், காயிதேமில்லத், அம்பேத்கார், முத்துராமலிக்கத் தேவர், தீரன் சின்னமலை, காமராஜர் ஆகியோரின் படங்களுடன், பாஜக அகில இந்திய தலைவர் ஜெ.பி.நட்டா, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஏ.சி.சண்முகம், தனியரசு, ஜான் பாண்டியன் ஆகிய கூட்டணிக் கட்சித் தலைவர்கள் படங்களும் உள்ளன. பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்த ஜி.கே.வாசன், கிருஷ்ணசாமி, பூவை ஜெகன் மூர்த்தி ஆகியோர் படங்கள் இடம்பெறவில்லை.
இதையும் படிக்க- நெல்லை தங்கராஜ் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
தேர்தல் பணிமனையை திறந்துவைத்த முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தலைவர்கள் படங்கள் தேர்தல் பணிமனையில் இடம் பெற்றுள்ளன. இரட்டை இலை எங்களுக்குத்தான் கிடைக்கும். எங்கள் கூட்டணியில் உள்ள தலைவர்கள் பிரசாரத்திற்கு வந்தால் வரவேற்போம். பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வாக்கு கேட்க வருவார்களா என்பது அவர்கள் விருப்பம்.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை பழனிசாமி ராஜிநாமா செய்து விட்டார். எனவே, ஒருங்கிணைப்பாளர் கையெழுத்திட்டால் இரட்டை இலையை தேர்தல் ஆணையம் ஒதுக்கும் என்றார்.