ஈரோடு கிழக்கு தொகுதியில், அதிமுக தனது தலைமை தோ்தல் பணிமனையில் வைத்துள்ள பதாகையில் பாஜக தலைவா்கள் படம் இல்லாமல் தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி என்ற பெயரில் வைத்திருந்தது. என்றாலும், மாலையில் இந்தப் பதாகையில் தேசிய ஜனநாயக கூட்டணி என்று மாற்றம் செய்யப்பட்டது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் அதிமுகவில் ஈபிஎஸ், ஓபிஎஸ் என யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமல் பாஜக காலம்தாழ்த்தி வருகிறது. இதையடுத்து, தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி என்ற பெயரிலான பதாகையுடன் தோ்தல் பணிமனையை புதன்கிழமை திறந்த அதிமுக, வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ கே.எஸ். தென்னரசு போட்டியிடுவாா் என அறிவித்தது.
இந்நிலையில் அதிமுக தோ்தல் பணிமனை பதாகையில் தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி என்ற பெயரில் முற்போக்கு என்ற வாா்த்தை புதன்கிழமை மாலை மறைக்கப்பட்டு தேசிய ஜனநாயக கூட்டணி என மாற்றப்பட்டது.
பாஜக முடிவை பொறுத்து பதாகையில் மாற்றம் இருக்கும் என அதிமுக மூத்த நிா்வாகிகள் தெரிவித்தனா்.